செவ்வாய், ஜனவரி 06, 2009

'ஜெய்ப்பூர் கால்களின்' பிரம்மா: 'டாக்டர்' சேதி!

ஆக்கம்: - சௌந்தரி
செயற்கைக் கால் என்றவுடன் நினைவுக்கு வருவது இந்தியாவில் ராஐஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரம். செயற்கைக் கால்களை முதல் முதலாக உருவகப்படுத்தி கால்களை இழந்து நடமாட முடியாமல் இருந்தவர்களுக்கு அவற்றை முறையாகப் பொருத்தி மீண்டும் அவர்களை நடமாட வைத்ததில் முன்னணியில் நின்றவர்
Dr Pramod Karan Sethi அவர்கள்.
டாக்டர் சேத்தி என்று அழைக்கப்பட்ட Dr P K Sethi ஐனவரி 05 ம் திகதி 2008 அன்று
தனது 80 ஆவது வயதில் காலமானார். இறந்தபின்பும் சாதனைகளால் நினைவில் நிற்பவர்கள் வரிசையில் டாக்டர் சேத்தியும் ஒருவர்.
டாக்டர் சேத்தியின் வாழ்நாள் பங்களிப்பு உலகில் பலரது வாழ்கைக்கு ஊன்றுகோலாக இருந்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக இலங்கையில் கண்ணிவெடி விதைகளினால் கால்களை இழந்த எமது உறவுகள் எழுந்து நடமாட முக்கிய காரணகர்த்தாவாக இவர் இருந்துள்ளார்.
ஆரம்பகாலத்தில் இவரால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக் கால்கள் மக்களது அன்றாட பாவனைக்கு சற்றுச் சிரமமாக இருந்தாலும் பின்பு 1970 ம் ஆண்டுகளில் மிகவும் இலகுவாக பாவனைக்கு ஏற்றவாறு நிவர்த்தி செய்யப்பட்டு உலகமட்டத்தில் பெரும் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுக் கொடுத்தன. செயற்கைக் கால்களைப் பொருத்தியவர்கள் கடினமான வேலைகளைக்கூட மற்றவர்களது உதவியின்றி தனியாகவே செய்யக்கூடியதாக இருந்தது. உதாரணமாக மரம் ஏறுதல், சைக்கிள் ஓட்டுதல், போட்டிகளில் கலந்துகொள்ளுதல் போன்ற கடின வேலைகளைக் கூட அவர்களால் சிரமமின்றி செய்யமுடிந்தது.
ஒரு காலை இழந்த சினிமா நாட்டிய நடிகை மயூரி ஜெய்ப்பூரில் பொருத்தப்பட்ட செயற்கைக் காலுடன் திரைப்படத்தில் நடனம் ஆடியதையும் மறந்திருக்கமுடியாது.
ஜெய்ப்பூர் செயற்கைக்கால்கள் உள்நாட்டு வளங்களைக் கொண்டு உருவாக்கப்டுவதால் குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. ஒரு முறை பொருத்திய கால்களுடன் குறைந்தது 5 வருடங்களுக்கு பிரச்சனைகள் ஏதுமின்றி இயங்கக்கூடியதாகவும் இருந்தமை டாக்டர் சேத்தியின் செயற்கைக் கால்களின் தனித்தன்மை ஆகும். அதுமட்டுமல்ல போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு கால்களை இழந்த அடித்தள மக்களுக்கு இலவசமாக செயற்கைக் கால்கள் பொருத்தப்படட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் மட்டுமல்ல யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பலநாடுகளிலும் செயற்கைக்கால்கள் இன்று நடமாடிக்கொண்டு இருக்கின்றன. ஆப்கானிஸ்தான், கம்போடியா, ஈராக், கென்யா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் செயற்கைக் கால்களின் பாவனை அதிக அளவில் இருக்கின்றது.
டாக்டர் சேத்தி 1927 ம் ஆண்டு நவம்பர் மாதம் வரணாசியில் பிறந்தார். இவரது தந்தை பௌதீகத் துறை பேராசிரியர். இந்தியாவில் டாக்டர் படிப்பை முடித்து லண்டன் மாநகரத்தில் ஆராச்சி படிப்பை தொடர்ந்தார். பின்பு Sawai Man Singh Hospital இல் தலைமைப் பேராசிரியராக பணிபுரிந்தார் (Head and Professor of Orthopaedic Department). பத்மசிறீ விருது, விஞ்ஞான சாதனையாளருக்கான கின்னஸ் விருது, சிறந்த சமூகத் தலைமைத்துவத்துக்கான றேமன் மக்சேசே விருது போன்ற பலவிருதுகளையும் பெற்ற சாதனையாளர் டாக்டர் சேத்தி அவர்கள்.
தற்கால போர்ச்சூழலில் குறிப்பாக இலங்கையில் செயற்கைக் கால்களின் தேவையும் பயன்பாடும் அதிகரித்துவரும் வேளையில் கால்களை இழந்த பலரது வாழக்கைக்கும் மீண்டும் உயிர்கொடுத்த டாக்டர் சேத்தியை நினைவுகூருவது தேவையானதொன்றாகும்.
சில வெற்றிடங்களை நிரப்புவது சுலபம் ஆனால் ஒரு சாதனையாளன் விட்டுச்சென்ற வெற்றிடம் நிரந்தரமாகவே இருக்கும். டாக்டர் சேத்தி காலத்தின் ஓர் அடையாளம் அவரது முயற்சியும் வெற்றியும் உலகம் முழுவதும் வாழும் எத்தனையோ உயிர்களின் வாழ்க்கையில் சாட்சியாக நடமாடுகின்றது என்பது முற்றிலும் உண்மை.

1 கருத்து: