வெள்ளி, ஜனவரி 30, 2009

வாழ்வினை இழந்த தோற்றம்

தென்றலது தாலாட்டும் தமிழ் ஈழமின்று
சதிகாரர் கைகளிலே பலியாகிப் போனகதை
பத்திரிகை வாசலில் முத்திரை பதிப்பதை
எத்திரை தடுத்தாலும் உதிரம் துடிக்கிறதே!

அன்று நடந்த கொலை ஆயிரமாயிரம்தான்
இன்று நடப்பதுவோ எண்ணிமுடியவில்லை
சுடுகின்ற துப்பாக்கி துரத்தும் பீரங்கி
தூரத்தே பறக்கின்ற துல்லிய விமானங்கள்
இடுகின்ற குண்டோடு ஏவுகணையத்தனைக்கும்
பலிபீட ஆடுகளாய் பாவிமக்கள் அழிவதுதான்
பழகிப்போகும் கதையாச்சோ!



இருந்த இடம் நீங்கி
இருக்குமிடம்தேடி
இறப்பதற்கே பிறந்தவர்போல்
இழந்தவர்கள் வருந்தியோடும்
கோலத்தை
காணொளியில் கண்டதற்கு வர்ணனைகள் ஏதுமுண்டோ!

ஆடையோர் அழுக்கும் ஆஸ்தியோர் பானையுமாய்
வாடையிலும் கோடையிலும் வதைவோரைப் பார்கையிலே
வாழ்வோரை வாழவைக்கும் வணங்கும் கடவுளரை
வையாமல் என்ன செய்ய!

திரும்பும் இடமெல்லாம் அழுதகண் வரண்டமேனி
தரித்திரப் படுக்கை; இரத்த வியர்வை; நிரந்தர ஊனம்
தன்மகனை ஏன் பெற்றோம் என்று மாய்கின்ற தாய்
கண்முன்னே நடப்பதனை காணப்பொறுக்காத வீரம்
விடுதலைவேண்டி குருதிநீராட போரிடும் வேகம்!
நெஞ்சு பிளந்து குஞ்சுகளை அள்ளும் கொடூரம்?
கொடுமையொழி; போரைநிறுத்து
தமிழர் பக்கம் பார்வையைத் திருப்பு
புலம்பெயர் தமிழர் கதறும் காட்சி
எங்கும் வாழ்வினை இழந்த தோற்றம்

பூமித்தாயே போன பசுமைதான் எங்கே?
போரின்றி நம்நாடும் மாறுமோ நன்றே!
பொன்னான பூமி பொல்லாத கைபட்டு
மண்ணாகிப் போகிறதே இது மறக்குமா!
இந்த சோகம் எமைவிட்டு இறக்குமா!
வானத்தைப்பார்த்து வாழ்ந்த உறவுகளின்
வாழ்வுநிலை மாற்ற யார் வருவார்?

கண்ணை முழிப்பதுவோ அந்நிய நாட்டில்
உடம்பில் காயமில்லை; உதிரம் சிந்தவில்லை
தோல் தடித்தாலும் ரத்தம் மறந்திடுமோ?
கண்விழித்த நாட்டையும் பிறந்த மண்ணையும்
இதயக்கிடங்கினில் சேமித்த உணர்வையும்
உயிருள்ளவரை யாரும் மறப்போமோ?

சௌந்தரி

1 கருத்து:

  1. பூபதி உங்கள் கவிதை கண்ணில் நீர் துளிகளை சிதற வைகின்றது. உறவுகள் இல்லாத வாழ்கையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

    பதிலளிநீக்கு