புதன், செப்டம்பர் 02, 2009

தாய்மடி - சௌந்தரி
தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்
தாலாட்டும் கேளாது கண்மூட வேண்டும்
சந்தம் சுமந்து வந்த வசந்தமொன்றின்
நெஞ்சம் அழுகின்ற இந்நேரம்;
கொஞ்சம் தலைசாய்ந்து கொள்ள
தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்

நிலைமைக்கு மீறிப் பறந்ததுமில்லை
நிலை தடுமாறி நின்றதுமில்லை
நித்தம் அழுது வளர்ந்ததுமில்லை
கனவில் வாழ்ந்து பழக்கமுமில்லை
நானென்ற வேடம் ஏற்றதுமில்லை
நானாக நானிருக்க பயந்ததுமில்லை
நானென்ற உணர்வில் அழித்ததுமில்லை
நான்விட்டு நானிருந்தால் அதில் அர்த்தமில்லை

நிற்காத நினைவுகள் அழுத்துகின்றவேளை
நிழலேது நிஐமேது ஏனிந்தத் தேடல்
தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்
தாலாட்டும் கேளாது கண்மூட வேண்டும்

உயிரும் உடலும் பிரிந்தபின்பு
உருவம் இருப்பதில் என்ன பயன்
இருவரில் ஒருவராய்
இறுதிவரை முதன்மையாய்
வந்தவர் தொடுப்பதற்கு
வரவைத்தவர் வளர்த்துவிட்டார்
அந்தரத்தில் ஆடுகின்ற இந்நேரம்
யாரிடம் சென்றுகேட்பேன் புதுவேதம்
என் கண்களில் ஏனோ கலக்கம்
என் நெஞ்சினில் ஏதோ வருத்தம்
என் கன்னமிரண்டிலும் கண்ணீர்
இதுவும் கடந்து போகும்
சொல்லிச் சென்ற தந்தையின் தத்துவம்
சுட்ட தங்கமிதை மிளிரச் செய்யும் - அதுவரை
தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்
தாலாட்டும் கேளாது கண்மூட வேண்டும்


ஒரு பிடி இதயம் இரு பாதியானால்
எது உன்பாதி அதில் ஏது நீதி
கட்டிய கனவு கலைவதுமுண்டு
காத்திருந்து கலைப்பவருமுண்டு
குறைகளில்லா மனிதரேயில்லை
குற்றம் கண்பதால் பலனேதுமில்லை
கற்றுக்கொண்டது வாழ்க்கைப்பாடம்
காலம் சொல்லும் காயத்துக்கு நியாயம்
எத்தனை தடைகள் எப்படி வரினும்
மனிதனாயிருந்து கடவுளாய் சிந்திக்கும்
கருணை கொண்ட மனசொன்று வேண்டும்
உடலென்ற பொறிக்குள் குறையொன்றுமில்லா
உணர்வுகள் பொங்கி மகிழ்வூட்ட வேண்டும் - அதுவரை
தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்
தாலாட்டும் கேளாது கண்மூட வேண்டும்

4 கருத்துகள்:

  1. வாங்க சௌந்தரி. நலமா. ரொம்ப நாளாச்சுப் பார்த்து. எப்படி இருக்கீங்க.

    தாய்மடி பற்றிய கவிதை அற்புதம். வார்த்தைகள் மிக அழகு.

    // என் கண்களில் ஏனோ கலக்கம்
    என் நெஞ்சினில் ஏதோ வருத்தம்
    என் கன்னமிரண்டிலும் கண்ணீர்
    இதுவும் கடந்து போகும்
    சொல்லிச் சென்ற தந்தையின் தத்துவம்
    சுட்ட தங்கமிதை மிளிரச் செய்யும் - அதுவரை
    தாய்மடியொன்று வாடகைக்கு வேண்டும்
    தாலாட்டும் கேளாது கண்மூட வேண்டும் //

    ஆஹா... ஆடிப் போயிட்டேங்க.

    பதிலளிநீக்கு
  2. நன்றியுடன் நலம் ராகவன். மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் அவ்வளவுதான். தீப்பந்தம் தலைகீழாக பிடித்தாலும் ஓங்கி உயர்ந்து ஒளிரத்தான் செய்யும். உங்களது பதிவின் சுவடுகள் உலகமெங்கும் பரவியிருக்கின்றது. எங்கு சென்றாலும் இராகவன் நைஜிரியா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ரேணுகா ஜோன்11/15/2011 7:17 AM

    “மனிதனாயிருந்து கடவுளாய் சிந்திக்கும்
    கருணை கொண்ட மனசொன்று வேண்டும்“

    அற்புதமான கவிதை வரிகள்.
    ஆனால் இப்படியும் மனிதரகள் இருப்பாரகளா இந்த நாளில் என்று யோசனையாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. ரேணுகா கடவுளை மனிதர்களில்தான் காணமுடியும். அன்பே சிவம் அன்புள்ள மனிதர்கள் எல்லோருமே கடவுள்தான்
    நானும் கடவுள் நீங்களும் கடவுள். எதையும் உடன்பாட்டு மனத்தோடு பாருங்கள். எதிர்மறையாக சிந்திப்பதை நிறுத்திவிடுங்கள்
    நம்பிக்கை இல்லாது அழுது வடியும் மனிதர்களைவிட்டு தூர விலகி நில்லுங்கள். எனது நண்பர்களின் தெரிவு எப்போதும் புத்துணர்ச்சியை தருவதாகவே இருக்கும்.
    அதேபோல் நல்ல நண்பர்களை தேடி கண்டுபிடித்து சந்தோசமாக இருங்கள். வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது வாழ்ந்து பாருங்கள்.
    என்றும் உங்கள் சகோதரி

    பதிலளிநீக்கு