வெள்ளி, செப்டம்பர் 11, 2009

24 மணிநேர தமிழ் வானொலி


Australia Tamil Broadcasting Corporation என்ற 24 மணிநேர வானொலி அவுஸ்திரேலியாவில் 9 வருடங்களாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது. 

இந்த வானொலியில் பகுதி நேரமாக 75 க்கும் மேற்பட்டவர்கள் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி தாமறிந்த கலைகளை தமிழ்மொழியில் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்கள்.

அதே வனொலியில் சனிக்கிழமை அவுஸ்திரேலிய நேரம் இரவு 10 மணியிலிருந்து 12.30 மணிவரை நடைபெறும் சிந்தனைச் சிதறல் என்ற நிகழ்ச்சியை கடந்த 8 வருடங்களாக மிக ஆர்வத்தோடு நானும் நடாத்திவருகின்றேன். இந்த நிகழ்ச்சியில் ஓர் குறிப்பிட்ட தலைப்பின்கீழ் கருத்துக்கள் பரிமாறப்படும். நேயர்கள் தமது எண்ணக்கருத்துக்களை தொலைபேசியில் அழைப்பெடுத்து கூறுவார்கள். ஒருமித்த கருத்துக்களும் மாற்றுக்கருத்துக்களுமாக மிகவும் அறிவுபூர்வமாகவும் சுவாரசியமாகவும் இந்த நிகழ்ச்சி இருக்கும். 

உங்களைப்போன்றே முகம் தெரியாத மனிதர்களுடன் மிகவும் நெருக்கமான ஓர் உறவை இந்த நிகழ்ச்சிமூலம் கடந்த எட்டு வருடங்களாக ஏற்படுத்தி வருகின்றேன். தொடர்ந்து வரும் பதிவுகளில் இந்த நிகழ்ச்சியைப்பற்றி விரிவாக எழுதுகின்றேன். 

இணைய வானொலியாகவும் செயல்படுவதால் நீங்களும் இந்த 24 மணிநேரமும் தமிழ் மொழியைப் பேசும் இந்த வானொலியை கேட்டு மகிழலாம். அதற்குரிய இணையத்தள முகவரியை இதனுடன் இணைத்துள்ளேன். முயற்சி செய்து பாருங்கள்.
www.atbc.net.au/

முடிந்தால் என்னோடு இந்த சனிக்கிழமை இரவு கதையுங்கள். இந்த வாரத்து நிகழ்ச்சிக்கான தலைப்பு தனிமை

வெற்றி பற்றி வித்தியாசமான ஒரு கருத்து உண்டு அதாவது தந்திரமாக செயல்பட்டால்தான் எதிலும் வெற்றி பெற முடியும் என்பது. இதை ஆங்கிலத்தில் cunning என்று சொல்வார்கள். இப்படி தந்திரமாக செயல்பட்டு அடைகின்ற வெற்றி ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே சந்தோசத்தைத் தரும் அதுவே நிரந்தர சந்தோசம் ஆகிவிடாது என்பதுதான் உண்மை.

தந்திரமும், புத்திசாலித்தனமும் ஒன்றுக்கொன்று தொடர்பானது போல் தெரிந்தாலும் இரண்டும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கின்றன. தந்திரமாக செயல்படுபவர்கள் அடுத்தவர்களை நம்பமாட்டார்கள். அவர்களுக்கு நட்பென்று யாருமே இருக்கமாட்டார்கள். தான் வெற்றி பெறவேண்டும் தனது எண்ணங்களை எப்பாடுபட்டாவது ஈடேற்றவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு காய்களை நகர்த்துவதால் மனிதநேயத்தை மறந்தவர்களாகி அவரைச் சார்ந்திருப்பவர்களை இறுதியில் ஏமாற்றிவிடுவார்கள்.

நேர்மையும் புத்திசாலித்தனமும் உடையவர்கள் எதைச் செய்தாலும் மற்றவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தனது வெற்றியை நோக்கி செல்வார்கள் அப்போதுதான் வெற்றி உண்மையான சந்தோசத்தை அவர்களுக்கு கொடுக்கும். அப்படிப்பட்டவர்களைத்தான் உலகமும் நம்பும். அவர்களால்தான் மற்றவர்கள் மீது அன்பு காட்டமுடியும், மற்றவர்கள்மீது நம்பிக்கை கொள்ளமுடியும்.

இந்த உலகம் நல்லது என்று நம்புகின்ற ஒருவருக்கு இந்த உலகத்தில் வாழ்கின்ற மக்கள் நல்லவர்கள் என்று நம்புகின்ற ஒருவருக்குத்தான் அவர்கள் சந்திக்கின்ற உலகமும் சந்திக்கின்ற மக்களும் தினம் வாழ்கின்ற வாழ்க்கையும் நல்லதாக அமையும்.

தினம் காலையில் நண்பர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் Good Morning  என்று சொல்கிறோமே அதன் அர்த்தம் என்ன? இந்த காலை உனக்கு நல்லதாக மலரட்டும் உனது நாள் இன்று நன்றாக இருக்குமானால் உன்னைப்போன்றே எனது நாளும் நன்றாக இருக்கும் என்கின்ற அர்த்தத்தில்தானே பரஸ்பரம் அங்கே அன்பு பரிமாறிக்கொள்ளப்படுகின்றது. நல்ல மனிதர்களுக்கிடையேயான உறவு என்றும் இனிமையானது அப்படிப்பட்ட அன்பை அனுபவிக்கும் மனசை கொண்டவர்கள் உண்மையிலேயே அதிஸ்டசாலிகள்.

ஒருவன் எடுத்ததுக்கெல்லாம் கோவப்படுவான். அவன் தன் கோபத்தை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று ஒரு மகானிடம் கேட்டான். அதற்கு அந்த மகான் சொன்னார்  உனக்கு எதிரிகளே இல்லாமல் பார்த்துக் கொள் கோவம் குறைந்துவிடும் என்று. சிலவாரங்கள் கழித்து மீண்டும் அவன் அந்த மகானிடம் வந்தான். அய்யா இப்போது முன்பைவிட எனக்கு அதிகமாக கோபம் வருகிறது. அதை யார் மீதாவது காட்டலாம் என்றால் எதிரிகள் எனக்கு யாருமே இல்லையே என்று சொன்னான்.

மகான் வியந்து போனார். என்ன சொல்கிறாய் உனக்கு இப்போது எதிரிகள் யாருமே இல்லையா அப்படி என்றால் அவர்களை எல்லாம் உன் நண்பர்களாக மாற்றி விட்டாயா என்று கேட்டார். அதற்கு அவன் பதில் அளிக்கையில் இல்லை என் எதிரிகள் அனைவரையும் சுட்டுக் கொன்று விட்டேன் என்றான். இப்படிப்பட்ட மனிதர்களை என்ன செய்வது?

அன்பிற்கு விரோதம் பாராட்டத் தெரியாது. மற்றவர்களது பிரச்சனைகளை, சந்தோசத்தை தனதாக நினைக்கத் தோன்றும். குடும்ப உறவில் நட்பில் வேலைத்தளங்களில் என்று எப்போதும் உண்மையோடு துணிவோடு தன்னை வெளிப்படுத்தி அவர்களால் அன்பு செலுத்தமுடியும்.

அன்பில்லாத ஒரு மனிதருக்கு எப்படி சந்தோசம் கிட்டும். மற்றவர்களது உணர்வுகளை மதிக்காது, வார்த்தைகளாலும் வன்முறையாலும் துன்புறுத்தும் அன்பற்ற மனிதர்களை எவரும் விரும்பமாட்டார்கள். எவரும் நாடி வராது யாரும் அணுகமுடியாத தூரத்தில் இருக்கின்றபோது அவர்களுக்கு வாழ்க்கையில் சந்தோசம் ஏற்படுமா? நினைப்பது கைகூடுமா? அவர்கள் வாழ்வதுதான் வாழ்க்கையா?

எதையும் உண்மையாக நேசியுங்கள் எதிர்பார்ப்புகள் இன்றி கட்டுப்பாடுகளின்றி ஒன்றை நேசியுங்கள். காதல் அன்பு நேசம் பாசம் உள்ளவர்கள் கண்களுக்கு மற்றவர்கள் குறைகள் தெரிவதுமில்லை நிறைகள் ஆச்சரியப்படுத்துவதுமில்லை. அதற்காக குட்டக் குட்ட குனிவதிலும் உடன்பாடில்லை. சந்தோசம் என்பது அவரவர் அனுபவிக்கும் சுதந்திரத்தைப் பொறுத்தே உள்ளது. நீங்கள் நேசிப்பவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு தடை போடாது தள்ளிநின்று ரசித்துப்பாருங்கள் நேசம் இறுதிவரை தொடரும்.

நாம் நேசிப்பவை எம்மைவிட்டு நழுவிப் போய்விடுமோ என்ற பயம் ஒருவரது மனதில் எப்போது ஏற்படுகின்றதோ அப்போதே அவர்களுக்கிடையே உள்ள நேசம் தொலைந்துவிடுகின்றது. சந்தேகம், சங்கடம், சஞ்சலம் என்ற சிக்கல்கள் மனதில் குடிகொள்ள ஆரம்பித்து அவர்களையும் அழித்து மற்றவர்களையும் வேதனைப்படுத்தும். வாழும் காலம் கொஞ்சம்தான் அன்பு செலுத்துங்கள்.

3 கருத்துகள்:

  1. *\\தந்திரமும், புத்திசாலித்தனமும் ஒன்றுக்கொன்று தொடர்பானது போல் தெரிந்தாலும் இரண்டும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கின்றன. தந்திரமாக செயல்படுபவர்கள் அடுத்தவர்களை நம்பமாட்டார்கள். அவர்களுக்கு நட்பென்று யாருமே இருக்கமாட்டார்கள்\\*

    இந்தக் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்திருந்தது. மிகவும் தெளிவானதும் ஆழமானதுமான பதிவு. நீண்ட இடைவெளியின் பின் வலைப்பக்கம் உலா வந்தேன். உற்சாக மூட்டிய பதிவு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. மிக நீண்ட நாட்கள் காரூரன். நலமா? சில மாற்றங்கள் தடங்கல்கள் அவ்வளவுதான்.
    வேர் ஆழப்பதிந்தால் மீண்டும் தளிர்க்கும். உங்களது பதிவுகளுக்கு ஓய்வு கொடுக்கப்ட்டுள்ளதா?
    தொடர்ந்து எழுதுங்கள், மீண்டும் வாருங்கள்

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு.

    திரும்ப திரும்ப படித்து பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு