வியாழன், பிப்ரவரி 12, 2009

காட்டுத்தீ

தாயகத்தில் அல்லலுறும் உறவுகளின் வேதனையில் இயங்கிக் கொண்டிருக்கையில் வாழ்ந்துகொண்டிருக்கும், வாழவைத்துக் கொண்டிருக்கும் நாட்டில் ஏற்பட்ட அவலம் இந்த கட்டுரையை எழுதவைத்தது.

ஆஸ்திரேலியாவில் வெப்ப காலத்தில் பொதுவாக ஏதாவது ஒரு மூலையில் காடுகள் பற்றி எரிவதுண்டு. அப்போதெல்லாம் அத்தீயை அணைப்பதற்கு அரசாங்கம் பலகோடி டொலர்கள் செலவு செய்வதும் அடுத்த வருடமாவது காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டவரவேண்டும் என்று புதிய உத்திகளை அறிவிப்பதும் வழமையான ஓர் விடயம். ஆனால் இந்த வருடம் ஏற்பட்ட காட்டுத்தீ உலகநாடுகளையே ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பவைத்துள்ளது.

மூர்க்கமான காட்டுத் தீயினால் ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் உயிர் மற்றும் உடமைகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை விக்டோரியா மாநிலத்தில் பரவிய காட்டுத்தீயால் 180 க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். கடந்த 100 வருடங்களில் இதுபோன்றதோர் கோரமான காட்டுத்தீ இடம்பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாப் பக்கத்திலும் இருந்து மக்களும் அனைத்து அமைப்புகளும் போட்டிபோட்டு உதவியவண்ணம் இருக்கிறார்கள். வேலைத்தளங்களில், ஒன்றுகூடும் இடங்களில், விளையாட்டரங்குளில், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் என்று எங்குபார்த்தாலும் உதவித்தெகையை மனம்விரும்பி கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள். விக்ரோறிய அரசு 10 மில்லியன் டாலர்களை புணரமைப்பு தொகையாக அறிவித்திருக்கும் வேளையில் றெட் குறொஸ் (Red Cross) ஊடாக 31 மில்லியன் டொலர்களை பொதுமக்கள் உதவிப்பணமாக கொடுத்துள்ளார்கள் அதைவிட வேறு பல அமைப்புகள் சேர்ந்து 20 மில்லியன் டொலர்களுக்கு மேலாக உதவியிருக்கின்றார்கள்.

இத்துடன் நின்றுவிடவில்லை ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து பெரிய பலசரக்கு வர்த்தக ஸ்பானங்களும் குறிப்பாக Woolworth, Coles போன்றவை 13ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும் விற்பனையின்மூலம் பெற்றுக்கொள்ளும் லாபம் அத்தனையையும் காட்டுத்தீயினால் பாதிப்படைந்தவர்களுக்கு கொடுக்கபோவதாக பேப்பர், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வழியாக அறிவித்தவண்ணம் இருக்கிறார்கள்.தமது நாட்டு மக்களின் துன்பத்தில் பங்குகொள்ளும் ஆஸ்திரேலிய மக்களின் ஆர்வத்தை பார்க்கும்போது சிலிர்கின்றது.
தாயகத்தில் அல்லலுறும் தமது சக உறவுகளின் துர்ப்பாக்கியநிலையை நினைத்து வேதனைப்படும் ஆஸ்திரேலியா வாழ் தமிழ்மக்களும் தாம் அடைக்கலம் புகுந்த நாட்டு மக்களிற்கு உதவவேண்டும் என்ற உணர்வில் செயல்திட்டங்களை நடைமுறை படுத்தியுள்ளார்கள். ரத்ததானம் செய்வதும், பொருள் பணம் போன்ற உதவிகளை வழங்குவதுமாக வெவ்வேறு வடிவத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள தமிழ் மக்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்த செயல்திட்டத்தை ஈழத்தில் அல்லலுறும் எமது உறவுகளின் நினைவாக என்று அர்ப்பணித்து அதை ஓர் கவனயீர்ப்பு வடிவமாக செயல்படுத்துகிறார்கள்.

தாயகத்தில் தினம்தினம் எமது மக்கள் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்பட்ட ஒவ்வொரு உடல்களையும் கோரமாகப் பார்க்கும்போது நெஞ்சம் கனத்துப்போகின்றது. காட்டில் வசிக்கும் உயிரினம் ஒன்று தீயினால் கஸ்டப்படுவதை சகிக்கமுடியாத மக்கள் வாழும் இந்த நாட்டவர் ஈழத்தில் தினம் துண்டாடப்படும் உடல்களை கண்டும் காணாமலும் ஏன் இருக்கிறார்கள்.


சர்வதேச உலகம் தேவையான அனுதாபத்தையோ, ஆதரவையோ ஏன் முழுமையாக தரமறுக்கின்றது. மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகள்கூட ஏன் எமது நாட்டில் நடக்கும் மனித உரிமைமீறலுக்கு குரல்கொடுக்க மறுக்கிறார்கள். புலம்பெயர் தமிழர்களாகிய நாம் தாயக அவலங்களைப்பற்றிய பரப்புரைகளை சரியான நேரத்தில் சரியான முறையில் உலகத்துக்கு எடுத்துரைக்க தவறிவிட்டோமா?

17 கருத்துகள்:

  1. பெயரில்லா2/13/2009 9:43 AM

    சுனாமிப பேரழிவின் போது சொந்த இரத்த உறவுகளாகிய தமிழ் மக்கள் வீடு வாசல்களையும் அனைத்து உடமைகளையும் இழந்து மாற்றிக் கொள்வதற்கு துணிஇன்றி பசியாலும் பட்டினியாலும் வாடிக்கொண்டிருந்த போது அரசாங்கமும் ஏனைய தொண்டு நிறுவனங்களும் கொடுத்த உணவுப் பொருட்களையும், உடுதுணிகளையும் இயக்கம் என்ற பெயரில் கொள்ளையடித்து அப்பொருட்களை பணமாக்கிக் கொண்ட சம்பவங்கள் கண்முன்னே விரிகின்றன.

    ஒரு நாகரிகமடைந்த சமுகத்தையும் காட்டுமிராண்டிகளையும் நீங்கள் ஒப்பிடுகிறீர்கள்.
    இங்கே உதவுவது சக மனிதருக்கு ஏற்பட்ட வலி துடைக்க.. அங்கே திட்டமிட்டு சக மனிதருக்கு வலி ஏற்படுத்துவது உதவி பெற....

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா2/15/2009 10:55 PM

    உங்கள் கட்டுரையில் உள்ள ஒரு படம் - வாயில்லாப் பிராணி ஒன்றுக்குத தண்ணீர் கொடுக்கும் மனிதர் - ஆயிரம் வார்த்தைகளாலும் விவரிக்க முடியாத அருமையான காட்சி. மனிதாபிமானம என்றால் என்னவென்று புரிந்துகொள்ளத் தெரியாத, கொலை வெறிபிடித்து அலையும் அனைத்து ஆயுத பாணிகளுக்கும் உங்கள் கட்டுரையிலுள்ள படம் சிறு சலனத்தையேனும் ஏற்படுத்துமாயின் அல்லலுறும் தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைத்த நிம்மதி ஏற்படாதா?

    பதிலளிநீக்கு
  3. ஐயோ பிள்ளை என்ன நிஜாயம் இது?? எங்கடை ஊர் எத்தினை வருசமா எரியுதெண்டு ஒருத்தரும் கவனிக்காமல் இருந்து கொண்டு உங்கை நெருப்புப் பிடிச்சதும் தூக்கிக் கொண்டு ஓடி வரீனையாம்???

    பதிலளிநீக்கு
  4. ஊருகொரு நிஜாயம்??? எங்கடை தமிழருக்கொரு நிஜாயமோ??

    பதிலளிநீக்கு
  5. பிள்ளை எங்கடை சனம் செய்யுற தியாகங்களுக்கு மோனை எப்பவோ ஒரு நாள் நல்ல பலன் கிடைக்கும்?? எல்லாம் வீணாகிப் போகாது?? நீர் அடோப் பிளாஸ் பிளையர் வைச்சிருந்தால் என்னடை குரலைக் கேட்கலாம்??

    பதிலளிநீக்கு
  6. // சரியான நேரத்தில் சரியான முறையில் உலகத்துக்கு எடுத்துரைக்க தவறிவிட்டோமா? //

    அப்படித்தான் நானும் நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  7. வழக்கொழிந்த தமிழ் சொற்கள் - இந்த தொடர் பதிவுக்கு தங்களை அழைத்திருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  8. பரிவோடு குவாலாவுக்குத் தண்ணீர் கொடுக்கும் காட்சி அவுஸ்திரேலியரின் ஜீவகாரூண்யத்திற்குச் சிறந்த சாட்சி.இந்தப் படத்தை நானும் சேகரித்து வைத்திருக்கிறேன்.

    மிகவும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. காலங் கடந்த பின்னர் தான் எம்மவர்களுக்கு ஞானம் பிறந்திருக்கிறது போலும்?? காலம் தான் இனித் தமிழர்களின் வாழ்வியலைத் தீர்மானிக்கும் என்று நினைக்கின்றேன்???

    பதிலளிநீக்கு
  10. வாருங்கள் பெயரில்லாத நண்பரே!
    அதே காட்டுமிராண்டிக் கூட்டத்தில் இருந்து வந்தவர்கள்தான் நாங்களும். எதிர்மறையாக சிந்திப்பதை விடுத்து பிழைகளை சீர்த்திருத்துவதட்கு ஏதாவது முயற்சியாவது எடுத்தோமா என்று சிந்தித்து பாருங்கள். எழுதுவதும் சொல்வதும் சுலபம். ஆனால் தளத்தில் நின்று செயல்படுவது என்பது இலகுவானதல்ல. குறைகளை மட்டும் சுட்டிக் காட்டுவதை விடுத்து நிறைகளையும் கண்டுபிடித்து உற்சாகப் படுத்தப் பழகவேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. வாருங்கள் சக்கடத்தார்!
    தமிழினம் அழிந்து கொண்டிருக்கும் இந்த வேளையிலும் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடும் நம்மவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கின்றது. தமிழர்கள் என்றால் என்ன அடிமைகளா? அரசு எது வேண்டுமானாலும் செய்யலாம் யாரும் கேட்க முடியாது என்ற எண்ணமா? தமிழர்களின் இவ்வளவு அழிவுக்குப்பின்னும் மனம் மரத்த தமிழர்களை என்னவென்று சொல்வது?

    பதிலளிநீக்கு
  12. வாருங்கள் ராகவன்!
    மனசு சரியில்லை அதனால்தான் உடன் பதிலிட முடியவில்லை. எனக்கு என்ன தோன்றுகின்றது என்றால் தமிழினத்தின் ஒற்றுமையற்ற மனப்போக்கின் விளைவே இன்றைய இந்தக் கொடுரமான அனுபவத்தைக் கொடுத்திருகின்றது.

    பதிலளிநீக்கு
  13. வாருங்கள் மணிமேகலா!
    ஜீவகாரூண்யத்தில் சிறந்த அதே மனிதர்கள் தாயகத்தில் நடைபெறுகின்ற தமிழின சுத்திகரிப்பை கண்டும் காணாமல் இருக்கின்றனரே? இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் சர்வதேசத்தின் கண்களை திறப்பதட்கு?

    பதிலளிநீக்கு
  14. வாருங்கள் கமல்!
    தமிழனின் சுதந்திரமான வாழ்வுக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்து விட்டார்கள் தமிழர்கள். நாம் புலம்பெயர்ந்து தப்பி விட்டோம் ஆனால் இன்று உயிரையே தியாகம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் தாய் மண்ணில் வாழும் தமிழர்கள். நீங்கள் கூறியது போல் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா2/20/2009 12:06 PM

    ஆங்கிலம் புரியாதவர்களும் ஆங்கிலம் படிக்கவிரும்பாதவர்களும் என்னை மன்னிக்க வேண்டும். கட்டுரை ஏற்படுத்திய கேள்விக்கான பதில் இதோ:

    http://transcurrents.com/tc/2009/02/new_plea_for_sri_lanka_civilia.html#more

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா2/20/2009 2:36 PM

    அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ வந்தாலும் அதை நமது பிரச்சனையுடன் தொடர்புபடுத்தி எழுதிக் கொள்வது புலம் பெயர் வலை எழுத்தாளர்களின் பாஷன் பொழுதுபோக்கு.

    திருட்டு விடியோ சினிமாவிலும், தமிழ் நாட்டு ரி வி நாடகங்களையும் பார்த்து அலுத்தபின்பு போர் அடித்த காரணத்தால் அவர்கள் வலை எழுத முயற்சிக்கிறார்கள். வேறு எதையும் எழுதி கொள்ள மூளைக்குள்ளும் பற்றாக்குறை என்பதால் நாமும் பெரிதாய் அககறை காட்டுகிறோம் என்று காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள். உண்மையில் உங்கள் சமூகத்தின் மீது உங்களுக்கு அககறை இருந்திருந்தால் நீங்கள் உங்கள் சமூகத்தை விட்டு ஓடி வந்திருக்க மாட்டீர்கள் என்பது தான் உண்மை. மற்றபடி எல்லாம் பாசாங்கும், வேசமும் தான். புலம் பெயர்ந்தவர்களின் வலைப்பின்னல்களில் உள்ளிடுவதைப படிக்கும் போது ஒருவருக்கொருவர் முதுகு சொறிந்து பண்பாடு என்ற பெயரில் அடக்கி வைத்த உள்மன வக்கிரங்களை தீர்க்க முனையும் ஆசைகளின் அருவருப்பு தான் வெளிப்படுகிறது...

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா3/04/2009 5:25 PM

    dont worry everything willbe good

    பதிலளிநீக்கு