கட்டுரை/கால்/வணங்குவது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை/கால்/வணங்குவது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜனவரி 24, 2009

எல்லோரும் சமமானவர்களே!

சௌந்தரி
அபியும் நானும் என்ற படம் பார்த்தபோது ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜை அவரது மனைவி வயதான பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொள்ளும்படி கூற அவர் செய்கையால் மறுப்பு தெரிவிப்பார். மனைவி தொடர்ந்து வற்புறுத்த வேண்டாவெறுப்பாக குனிகிறார். இந்தக் காட்சியை பார்த்ததும் எனது மனதில் நீண்ட காலமாக உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விடயம் ஞாபகத்திற்கு வந்தது. அதையே இன்று எழுதுவோம் என்று யோசித்தேன்.


ஊரில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த நாடுகளிலும்கூட பல வைபவங்களில் மனிதர்களின் கால்களில் மனிதர்கள் விழுவதை காணக்கூடியதாக இருகின்றது. இந்தப் பழக்கம் நீண்ட காலமாக வழக்கத்தில் வந்துகொண்டு இருகின்றது. திருமண நிகழ்வுகளில் பல நூறு பேர் பார்த்துக் கொண்டிருக்க பெற்றவர்கள் கால்களில் மட்டுமல்லாது மற்ற உறவுக்காரர்கள் கால்களில் விழுவது, அரசியல் மேடைகளில் தலைவன், தலைவியின் காலில் விழுவது, கோயில்களில் பெரிய ஐயர், ஆசிரமங்களில் மகான் போன்றவர்கள் கால்களில் விழுவது என்று இன்னும் பல.

ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனைவிட எந்த வகையிலும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் துறையில் தனித்திறமைகள் இருக்கின்றது. அந்த வகையில் பார்த்தால் எல்லோரும் சமமானவர்களே. என்னை பொறுத்தவரையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் காலில் விழுவதென்பது அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் ஒரு செயலாகும்.

பெற்றவர்கள் காலில் விழுவது அவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை என்று சொன்னாலும் மரியாதையை வெளிக்காட்டுவதட்கு இது ஒன்றுதானா வழி. மரியாதை என்பது மனசில் இருக்கவேண்டும் மற்றும் செயலில் இருக்கவேண்டும் வெறும் வாய்சொல்லிலோ காலில் விழுந்து வழிபடுதலிலோ மட்டும் இருந்தால் போதாது. பெரியவர்களது அறிவுரைகள், அவர்களது அனுபவதேர்ச்சி போன்றவற்றை முன்னுதாரணமாக ஏற்று வாழ்வதே அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதைதான்.

பொதுவாக குழந்தைகளை மற்றவர்கள் கால்களில் விழுந்து வணங்கும்படி சொல்வது மிகவும் நெருடலானது. பெரியவர்களிடம் அன்பு செலுத்து, அவர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்கள் சொல்கேட்டு நட என்று சொல்லிக் கொடுக்கும் பெற்றோர்களே வீட்டில் விறகு கொத்த வரும் வேற்று ஜாதியைச் சேர்ந்த வயோதிபர் கதிர்காமுவை கதிர்காமன் என்று கூப்பிட சொல்வார்கள், உடுப்புத் துவைக்கும் மாணிக்கம் என்ற வயதான பெண்மணியை தொட்டுப் பேச அனுமதிக்க மாட்டர்கள், பாட்டி வயதை ஒத்த அவரையும் மாணிக்கம் என்றே அறிமுகப் படுத்துவார்கள்.

இப்படியாக குழந்தைகளுக்கு பல முரண்பாடுகளை வீட்டுக்குள்ளேயே உருவாக்கும் பெரியவர்கள் அவர்களை மற்றவர்கள் கால்களில் விழச் சொல்வது தன்னம்பிக்கைக்கு எதிராக அவர்களை தூண்டுவது போல்தான் தோன்றுகிறது. இப்படிப்பட்ட காட்சிகளை திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அதிகமாகக் காணக் கூடியதாக இருக்கிறது.

யாருடைய நம்பிக்கைகளையும் குறை கூறும் நோக்கம் எதுவும் இங்கு இல்லை. மனதில் தோன்றிய சிந்தனையின் வெளிப்பாடு மட்டும்தான். உங்களது பக்க நியாங்களையும் முன் வையுங்கள் ஆரோக்கியமான கருத்துக்களமாக அமையட்டும்.