வெள்ளி, பிப்ரவரி 20, 2009

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் என்ற தொடர்பதிவில் என்னையும் இணைத்துக்கொண்ட நண்பன் ராகவனுக்கு முதலில் நன்றி. எதை எப்படிப் பதியலாம் என்ற சிந்தனைக்குள் நுழைந்தபோது இரு தினங்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவருடன் சிலநிமிடங்கள் பேசியவை நினைவில் வந்தன. அந்த சில நிமிடங்கள் இப்படி பயனுள்ளதாக மாறியதை நினைக்கும் போது மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருகின்றது. அவற்றுடன் எனது எண்ணங்களில் உதித்தவற்றையும் இணைத்து ஓர் சிறு பதிவாக இடுகின்றேன்.

மொழியை எழுதுவதிலோ அல்லது பேசுவதிலோ தவறு,பிழை,தப்பு,குற்றம் என்றெல்லாம் யோசிக்கவேண்டியது அவசியமில்லை. நான் சொல்வது உங்களுக்கும் நீங்கள் சொல்வது எனக்கும் புரிய வேண்டும் அதற்கான கருவியாக மொழியின் பயனை பாவிக்கவேண்டும் என்பது எனது சிறிய கருத்து.

''யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற கணியன் பூங்குன்றனின் பாட்டை முதலில் எடுத்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்தப்பாட்டிற்கு பொருள் “எல்லாம் நம் ஊரே யாவரும் நம் உறவினரே” என்பது. இதில் கேளிர் என்பது உறவினர் என்ற பொருளையே குறிக்கிறது. ஆனால் பொதுவாக எல்லோரும் கேளிர் என்பதை கேளீர் என்று நீட்டி எல்லோரும் கேளுங்கள் என்ற பொருள்பட கூறிக்கொள்கிறார்கள். கேளீர் என்று சொல்வதால் சொல்லவந்ததன் கருத்தே மாறிவிடுகின்றது. இதில் இன்னுமோர் விடயம் என்னவென்றல் கணவனை ‘கேள்வன்’ என்றும் குறிப்பிடுவதுண்டாம். கேளிர் என்ற சொல்லில் இருந்துதான் கேள்வன் வந்திருக்கலாம்.

''குட்டு வெளிப்பட்டுவிட்டது'' பார்த்தீர்களா? இங்கு குட்டு என்ற சொல் ரகசியம் என்ற பொருளைத் தருகிறது. ஒவ்வாருவர் வாழ்க்கையிலும் ஏதாவது குட்டு இருக்கத்தான் செய்யும. அதனால்தான் மோதல் வரும்போது குட்டை உடைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்கள். ஆனால் நல்ல காலம் குட்டு என்ற சொல் பயன்பாட்டில் குறைந்துவிட்டது.

அதே நேரத்தில் குட்டம் என்றால் பள்ளம் அல்லது ஆழம் என்ற பொருளைக் குறிக்கும். ''குளம்குட்டை'' என்ற சொற்தொடரில் குட்டை என்பது சிறு பள்ளத்தை குறிக்கின்றது. சின்னவயசில் அப்பா தலையுச்சியில் குட்டியது ஞாபகம் இருக்கின்றதா? தலையில் பள்ளம் வருவதுபோல் கைமுட்டியால் அழுத்திக் குட்டுவதால் குட்டுதல் என்று வந்திருக்கும். குட்டம் என்ற சொல்லும் மருகிவிட்டது.

முகத்தல் என்பது தண்ணீரை வாளியில் நிரப்பி எடுத்தல். முகவை என்பது நீர் இறைக்கும் வாளியைக் குறிக்கும். முகத்தல் என்பதுதான் பின்பு பேச்சுவாக்கில் மோந்து கொண்டு வா என்று மாறிவிட்டது. முகத்தல் முகவை போன்ற சொற்களும் பாவனையில் இருந்து மறைந்து கொண்டு போகின்றன.

''துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை''


இதன் பொருள் உண்பவருக்கு உண்பதற்குரியனவாகிய உணவுகளை உள்வாங்கி அவ்வாறு உண்பவருக்குத் தானும் உணவாவது மழையேயாகும். இது நீரின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

இந்தக் குறளில் வரும் துப்பு என்ற சொல் உணவு என்ற பொருளை குறிக்கிறது. இதில் துப்பு என்ற சொல் ஐந்துமுறை திரும்ப வருகிறது. ஆனால் யாரும் நான் துப்பு உண்ணப் போகின்றேன் என்று கூறுவதில்லை.

ஆனால் ''துப்புக் கெட்டவன்'' என்று திட்டுகிறோம். அவ்வாறு ஒருவரைத் திட்டும்போது ஒரு வேளை சாப்பாட்டுக்குக்கூட வழியற்றவன் என்றே பொருள். அதை உணர்ந்துதான் திட்டுகின்றோமா என்பது கேள்விக்குறிதான்?

அதேவேளை துப்பு என்ற சொல் பலபொருள் கொண்டதாகவும் உள்ளது. ''துப்புத் துலக்குதல்'' அல்லது ''துப்பறிதல்'' என்பதில் வருகின்ற துப்பு ஒரு செயல் நடந்துவிட்டால் அது பற்றிய விபரங்களை ஆராய்ந்து கண்டுபிடித்தல் என்ற பொருள்பட வருகின்றது. அதேபோல் துப்புதல் என்ற சொல்லில் வரும் துப்பு வேறோர் பொருளை கொண்டுள்ளது. எச்சிலை கண்ட இடத்தில் துப்புவது அல்லது ஒரு பொருளைக் கடித்து துப்புவது. இந்தத் துப்பு இப்போதும் பாவனையில் உள்ளது.

சரி உங்களுக்கு வயது என்ன? இவ்வாறு கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? 20 வயதாகிறது அல்லது 30 ஆண்டுகள் ஆகின்றன அல்லது அந்தப் பெரியவருக்கு 60 அகவையாகின்றது என்றுதானே?

ஆக வயதுக்கு இன்னுமொரு பொருள் அகவை. அகவை என்பது பொதுவாக குறைந்த அளவுதான் பாவனையில் உள்ளது. ஆனால் ஈழத்தில் ஓரளவு பாவிக்கப் படுகின்றது. அதே போல் வயசு, வயது இரண்டும் ஒன்றுதானோ?

"வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை" என்றோர் பாடலும்; "நினைத்தேன் வந்தாய் நூறு வயசு" என்றோர் பாடலும் இருக்கின்றது அல்லவா? இதிலிருந்து வயது வயசு இரண்டும் ஒன்றுதான் என்ற முடிவுக்கு வருவோமே.

"கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு" இதில் கறுப்பு என்பது நிறத்தைக் குறிக்கும். அப்போ கருப்பு என்பது என்ன? கருமை, கரிய, கார்குழலி என்ற சொல்லில் வரும் கார் என்பன நிறத்தைத்தானே குறிக்கின்றன. கருப்பண்ணைசாமி என்ற சாமி கையில் அரிவாளுடன் நிற்கும் காட்சி கடும்கோபத்தைத்தான் குறிக்கிறது. ஆகவே கருப்பு என்பதற்கு கோவம் என்ற பொருளும் வருகின்றது. கறுப்பு என்பது நிறத்தை மட்டுமே குறிக்கிறது ஆனால் கருப்பு என்பதற்கு வேறு பொருள்களும் உண்டு.

சரி "மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்" என்ற திரைப்படப்பாடலில் வரும் மெல்ல என்ற சொல்லுக்கும் "மெள்ள வா" என்ற தொடரில் வரும் மெள்ள என்ற சொல்லுக்கும் என்ன வித்தியாசம். மெல்ல நட என்றால் மென்மையான நடையைக் குறிப்பது போலவும் அல்லது மெல்லப்பேசு என்பது மென்மையாகப் பேசு என்பதையும் குறிக்கின்றது. ஆக மெல்ல என்பது மென்மை என்ற பொருளை உணர்த்துகிறது ஆனால் மெள்ள வா என்றால் ஆறுதலாக வா என்று தானே பொருள் படுகிறது. எல்லாமே குழப்பமாக இருகின்றது. மெல்ல மெள்ள இரண்டும் ஒன்றுதானோ?

சும்மா வாசித்து விட்டு போகாதீர்கள். தரவுகளைவிட குழப்பங்கள்தான் அதிகமாக இருக்கும். உங்கள் கருத்துக்கள் எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் மிக முக்கியமானதும் அவசியமானதும்கூட.

இன்னுமோர்விடயம் என்னவென்றால் சில ஆங்கிலச்சொற்கள் எங்கள் மனதில் தமிழ் சொற்களாக பதித்துவிட்டது. உதாரணத்துக்கு கோர்ட் - நீதிமன்றம்; பொலிஸ் - காவல்துறை பாங்க் - வங்கி; போட்டோ – நிழல்படம் இப்படி இன்னும்பல பாவனையில் இருந்து நீங்கிவிட்டன.

சரி இதற்குமேலும் குழப்பாமல் வழக்கொழிந்த தமிழ் சொற்கள் என்ற பதிவுத் தொடரை தொடர்வதற்கு புதியவர்களை அறிமுகப்படுத்தவேண்டாமா?

சக்(ங்)கடத்தார்: http://sakkadaththar.blogspot.com/

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மகன். பலதும் பத்தும் எழுதக்கூடிய ஆற்றல் உள்ளவர். தொடர்ச்சியாக தாய்நிலத்தின் சோகங்களை எழுதிக்கொண்டிருப்பதால் ஓர் மாற்றத்திற்கு இத்தொடரையும் தொடரும்படி கேட்போம்

நட்புடன் ஐமால்: http://adiraijamal.blogspot.com/

கணனிபற்றி கலக்கிக் கொண்டிருக்கும் ஐமாலை இந்தத் தொடருக்காக கொஞ்சநேரம் செலவிடும்படி கேட்பதில் ஒன்றும் தவறில்லையே

ரசிகா: http://rasigarasigan.blogspot.com/
இவர் என்பதிவுக்கு புதுவரவு அவரை உங்களுக்கும் அறிமுகப்படுத்துவது ஓர் கடமையாகின்றது.

இவர்கள் இன்னும் பல நண்பர்களை அறிமுகப் படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் இத் தொடர் தொடர வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைவு செய்கின்றேன்.

வியாழன், பிப்ரவரி 12, 2009

காட்டுத்தீ

தாயகத்தில் அல்லலுறும் உறவுகளின் வேதனையில் இயங்கிக் கொண்டிருக்கையில் வாழ்ந்துகொண்டிருக்கும், வாழவைத்துக் கொண்டிருக்கும் நாட்டில் ஏற்பட்ட அவலம் இந்த கட்டுரையை எழுதவைத்தது.

ஆஸ்திரேலியாவில் வெப்ப காலத்தில் பொதுவாக ஏதாவது ஒரு மூலையில் காடுகள் பற்றி எரிவதுண்டு. அப்போதெல்லாம் அத்தீயை அணைப்பதற்கு அரசாங்கம் பலகோடி டொலர்கள் செலவு செய்வதும் அடுத்த வருடமாவது காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டவரவேண்டும் என்று புதிய உத்திகளை அறிவிப்பதும் வழமையான ஓர் விடயம். ஆனால் இந்த வருடம் ஏற்பட்ட காட்டுத்தீ உலகநாடுகளையே ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பவைத்துள்ளது.

மூர்க்கமான காட்டுத் தீயினால் ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் உயிர் மற்றும் உடமைகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை விக்டோரியா மாநிலத்தில் பரவிய காட்டுத்தீயால் 180 க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். கடந்த 100 வருடங்களில் இதுபோன்றதோர் கோரமான காட்டுத்தீ இடம்பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாப் பக்கத்திலும் இருந்து மக்களும் அனைத்து அமைப்புகளும் போட்டிபோட்டு உதவியவண்ணம் இருக்கிறார்கள். வேலைத்தளங்களில், ஒன்றுகூடும் இடங்களில், விளையாட்டரங்குளில், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் என்று எங்குபார்த்தாலும் உதவித்தெகையை மனம்விரும்பி கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள். விக்ரோறிய அரசு 10 மில்லியன் டாலர்களை புணரமைப்பு தொகையாக அறிவித்திருக்கும் வேளையில் றெட் குறொஸ் (Red Cross) ஊடாக 31 மில்லியன் டொலர்களை பொதுமக்கள் உதவிப்பணமாக கொடுத்துள்ளார்கள் அதைவிட வேறு பல அமைப்புகள் சேர்ந்து 20 மில்லியன் டொலர்களுக்கு மேலாக உதவியிருக்கின்றார்கள்.

இத்துடன் நின்றுவிடவில்லை ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து பெரிய பலசரக்கு வர்த்தக ஸ்பானங்களும் குறிப்பாக Woolworth, Coles போன்றவை 13ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும் விற்பனையின்மூலம் பெற்றுக்கொள்ளும் லாபம் அத்தனையையும் காட்டுத்தீயினால் பாதிப்படைந்தவர்களுக்கு கொடுக்கபோவதாக பேப்பர், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வழியாக அறிவித்தவண்ணம் இருக்கிறார்கள்.தமது நாட்டு மக்களின் துன்பத்தில் பங்குகொள்ளும் ஆஸ்திரேலிய மக்களின் ஆர்வத்தை பார்க்கும்போது சிலிர்கின்றது.
தாயகத்தில் அல்லலுறும் தமது சக உறவுகளின் துர்ப்பாக்கியநிலையை நினைத்து வேதனைப்படும் ஆஸ்திரேலியா வாழ் தமிழ்மக்களும் தாம் அடைக்கலம் புகுந்த நாட்டு மக்களிற்கு உதவவேண்டும் என்ற உணர்வில் செயல்திட்டங்களை நடைமுறை படுத்தியுள்ளார்கள். ரத்ததானம் செய்வதும், பொருள் பணம் போன்ற உதவிகளை வழங்குவதுமாக வெவ்வேறு வடிவத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள தமிழ் மக்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்த செயல்திட்டத்தை ஈழத்தில் அல்லலுறும் எமது உறவுகளின் நினைவாக என்று அர்ப்பணித்து அதை ஓர் கவனயீர்ப்பு வடிவமாக செயல்படுத்துகிறார்கள்.

தாயகத்தில் தினம்தினம் எமது மக்கள் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்பட்ட ஒவ்வொரு உடல்களையும் கோரமாகப் பார்க்கும்போது நெஞ்சம் கனத்துப்போகின்றது. காட்டில் வசிக்கும் உயிரினம் ஒன்று தீயினால் கஸ்டப்படுவதை சகிக்கமுடியாத மக்கள் வாழும் இந்த நாட்டவர் ஈழத்தில் தினம் துண்டாடப்படும் உடல்களை கண்டும் காணாமலும் ஏன் இருக்கிறார்கள்.


சர்வதேச உலகம் தேவையான அனுதாபத்தையோ, ஆதரவையோ ஏன் முழுமையாக தரமறுக்கின்றது. மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகள்கூட ஏன் எமது நாட்டில் நடக்கும் மனித உரிமைமீறலுக்கு குரல்கொடுக்க மறுக்கிறார்கள். புலம்பெயர் தமிழர்களாகிய நாம் தாயக அவலங்களைப்பற்றிய பரப்புரைகளை சரியான நேரத்தில் சரியான முறையில் உலகத்துக்கு எடுத்துரைக்க தவறிவிட்டோமா?

செவ்வாய், பிப்ரவரி 10, 2009

கசக்கின்றது காலம் .....


கடந்த சில நாட்களாக எழுதியதைவிட வாசித்ததே அதிகம். எங்கு பார்த்தாலும் வலியுடன்கூடிய வார்த்தைகள். இதற்குள் நான் எழுதி எதை சாதிக்கப் போகின்றேன் என்ற சிந்தனை வேறு.

எங்கு பார்த்தாலும் கவனயீர்ப்பு போராட்டம், பரப்புரை வடிவங்கள், தீக்குளிப்பு உண்ணாவிரதம், மறியல் போராட்டம் என்று எல்லாவிதமான போராட்ட வடிவங்களையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அழிந்து கொண்டிருக்கும் தமது உறவுகளை மீட்டெடுக்க ஆயுதமாக பாவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் எதற்கும் அஞ்சாது தமிழரை அழிப்பதே எமது கடமை என்று தாயகத்தில் நாள்தோறும் சிறிலங்கா இராணுவம் அப்பாவி மக்களை கொன்று தீர்த்த வண்ணமே இருக்கின்றது. ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரக் கொலைகள், ஊனங்கள் என்று வார்த்தைகளில் கூறமுடியாத சோகங்கள்.

நவஜோதி ஜோகரட்னம் எழுத்தில் வந்த கவிதை ஒன்றை வாசித்தேன். கசக்கின்றது காலம் என்ற வரிகளுக்குள் எல்லாமே அடங்கும்.

குத்தும் குளிரிலும் - என்
குருதி மிதமான சூடு
உரிமையிழந்த மண்ணின்கோலம்
பார்வையில் படியும்போது
உடல் இறுகி உதிரம் உறைகிறது

சரித்திர வட்டத்தில்
நெருப்பு இடி பூகம்ப வெடிகள்…
மூடாத குழிகளில்
அம்மா அப்பா மட்டுமன்றி
ஐயோ எம்
எதிர்காலச் சோளக் கதிர்களெல்லாம்
சிதறிப் போய்க்கிடக்கிறது…
இளவேனில் மழைத்தூறல்
சிவப்பாகி பெருக்கெடுக்கிறது…
இரும்பு இதயங்களின் வேற்றுமை படர்ந்து
மண்ணும் வெடுக்கெடுக்கிறது…
இனவாதச் சகதிக்குள் மனிதக் கருகல்கள்…
மனிதத்துக்குக் கண்ணீர் அஞ்சலி!

நாமோ மண் எங்கும் ஓடுகின்றோம்…
கனத்து கரைந்து கசக்கிறது காலம்…
எரிகிறது இதயம்…
ஒளி செத்த தேசம்…
சிவப்பாகும் கோபம் உங்களை திரட்டி விழுங்காதா? – எம்
குருதியைச் சீராக்கி
சிரிப்பைக் கண்டெடுத்து
சுதந்திரம் விரைந்து விரைவில்
மாலைகளாய் எம்
கழுத்தில் வீழாதா?...

செவ்வாய், பிப்ரவரி 03, 2009

தியாகி ரவிக்கு வீர வணக்கங்கள்


இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்த திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி இன்று காலை மரணமடைந்தார். தியாகி ரவிக்கு வீர வணக்கங்கள் , அன்னாரின் குடும்பத்தினர்க்கு ஆழ்த்த அனுதாபங்கள்.

உறவுகளே .... ரவியின் தீக்குளிப்பு இறுதியானதாக இருக்கட்டும். தயவு செய்து இப்படி உயிரைவிடாதீர்கள். உங்களது விலைமதிப்பற்ற உயிரை அழிப்பற்கு கொண்டுள்ள மனத்திடத்தை ஆக்கபூர்வமான வழிகளில் பாவிக்கலாம். அநீதியை எதிர்த்து போராட வேறுவழிகள் நிறைய உண்டு. அவற்றை கண்டுபிடித்து செயல்படுங்கள்.

இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்த ஓர் தமிழனை வாய் கூசாமல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே ரவி தீக்குளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ரவியின் மனைவி சித்ராவும், மூத்த மகன் பிரபாகரனும் மறுத்திருந்தனர். தமிழக அரசின் அழுத்தம் காரணமாக இவரின் தியாக மரணத்தை திசைதிருப்ப தமிழக காவல் துறை முயன்றுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. ஒரு உயிரின் மதிப்பை பார்த்தீர்களா?

தமிழக சுயநலவாத அரசியல்வாதிகளையும் மத்திய அரசையும் எரிப்பதற்கு எத்தனை உயிர்கள் எரிந்தாலும் ஒன்றும் நடக்காது. அவர்களை மாற்றுவதற்காக நீங்கள் உடல்களில் தீயை பற்ற வைக்காதீர்கள். மக்கள் மனங்களில் கருத்துக்களில் செயற்பாடுகளில் மாற்றத்தை கொண்டுவர முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் கபட நாடகம் போடும் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புங்கள்.

ரவி அவர்கள் ஈழத்தின் மீதிருந்த பற்றுக் காரண்மாகவே தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்திருந்தார். இவரது உயிர் கொடைக்கு கிடைத்த பரிசை பாருங்கள். கொதித்து எழும்பும் எதிர்ப்பலையை திசைதிருப்ப கபட அரசியல்வாதிகளினால் சோடிக்கப்பட்ட களங்கமிது.

உறவுகளே பெறுமதியான் உங்கள் உயிரை வீணாக்காதீர்கள். இந்த உலகில் இருந்து இன்னும் எவ்வளோவோ உங்களால் சாதிக்க முடியும். உங்கள் வீர மரணம்கூட களங்க படுத்த படலாம் உணர்ச்சி வசப்பட்டு உயிரைப் பலிகொடுகாதீர்கள். வீரர்களின் சாவு சரித்திரமாக வேண்டும் அதற்காக உழையுங்கள்! தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் மனிதர்கள் வாழும் உலகமிது
சிந்தியுங்கள்!

தமிழர்கள் அனைவரும் இணைந்து பகைவர்கள் யாராயினும் அவர்களை எதிர்க்கத் துணிந்து விட்டார்கள் என்று இன்னும் ஏன் புரியவில்லை இந்த இந்திய அரசுக்கு. ஈழத் தமிழனுக்கு, சொந்தச் சகோதரனாய், இரத்த உறவுக்காரனாய் தமிழகத்துத் தமிழன் தோள் கொடுத்து நிற்கின்றான் என்பது இன்னுமா இந்திய தலைவிக்கு புரியவில்லை. நாளாந்தம் குண்டுவிச்சுக்கும், எறிகணை வீச்சுக்கும் இலக்காகிப் பலியாகும் அவலம் இனியும் தொடர வேண்டாம் எனத் ஈழத் தமிழர்களுக்காகத் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் தமிழக தமிழர்களைப் பார்த்தாவது எதை எப்போது எதிர்க்க வேண்டும்;எப்போது ஆதரிக்கவேண்டும் என்பதில் ஓர் தெளிவை மற்றவர்கள் ஏறபடுத்திக்கொள்ளவேண்டும். ஒன்று பட்டால்தான் உண்டு வாழ்வு!